Monday, March 4, 2024

25.2.2024 கவியரங்கம் 20 . "என்ன வளம் இல்லை எங்கள் தமிழ் மொழியில்" - இரவி-தமிழ்ச் செம்மல் விருது-பாராட்டு-3 நூல்கள் வெளியீடு -விருது வழங்குதல்

 


 


25.2.2024 மாமதுரைக் கவிஞர் பேரவை- கவியரங்கம் 20 . "என்ன வளம் இல்லை  எங்கள் தமிழ் மொழியில்" என்ற தலைப்பில் நடந்தது.

 மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் -, "என்ன வளம் இல்லை  எங்கள் தமிழ் மொழியில் " என்ற தலைப்பில் நடந்தது  மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது.

தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார் ,செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் முனைவர் இரா.வரதராசன்,  ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலர் கு .கி .கங்காதரன் நன்றி கூறினார் .

மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில்,"என்ன வளம் இல்லை  எங்கள் தமிழ் மொழியில் "   என்ற தலைப்பில், கவியரங்கம்.நடந்தது கவிஞர்கள் இரா. இரவி, முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம், கு .கி .கங்காதரன், பெரி .கரு .சம .சமயக்கண்ணு  ,இரா .இராம பாண்டியன் ,மா .வீரபாகு ,கி. கோ.குறளடியான், ச .லிங்கம்மாள், மு .இதயத்துல்லா ( இளையாங்குடி ) , அஞ்சூரியா க .செயராமன் , தென்காசி ம .ஆறுமுகம் ,புலவர் மகா .முருகபாரதி ,செ..அனுராதா , சு முனைவர் .நாகவள்ளி ,  ஆகியோர் கவிதை பாடினார்கள் .

கவிஞர் இரா .இரவி தமிழ்ச்செம்மமல் விருது பெற்றதை  முன்னிட்டு பொறுப்பாளர்கள் பொன்னாடைப் போர்த்தி வாழ்த்தினார்கள் .

கவிஞர்கள் பாடிய கவிதைகளில் சிறந்த இரண்டு  கவிதை வாசித்த கவிஞர்கள்  பறம்பு நாகராசன் மற்றும்  ,இரா .இராம பாண்டியன் அவர்கள்  விருது பெற்றனர்.

நன்கொடையாக விழாக்களை  படம் எடுத்து உதவும்  படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ,கலை ஆசிரியர் சுந்தர கிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு விருதும் ,மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர் ,மறைந்தும் மறையாத கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் சார்பில் அவரது மகன் ஆதி சிவம் தென்னவன் விருதுகள் வழங்கினார். 

கவிஞர் இரா .இராம பாண்டியன் எழுதிய "கவிதைக் கனிகள் " நூலும் , துணைத்தலைவர் முனைவர் கவிஞர் இரா.வரதராசன் எழுதிய 'கோமாளியாக்கப்பட்ட கோமான்' என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நூலும் , கவிதாயினி செ.அனுராதா எழுதிய   "ஆன்மிக அருளமுது" நூலும்  " வெளியிடப்பட்டன. 


வருகை தந்த கவிஞர்களுக்கு நூல்கள் வழங்கினர்.கவிஞர்கள் குறளடியான் ,தென்காசி திருவள்ளுவர் கழகம் ம. ஆறுமுகம்  ஆகியோர் கவிஞர் இரா .இரவிக்கு   வாழ்த்துக் கவிதை வாசித்தனர் .

கவியரங்கிற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத்  தந்து உதவும் பள்ளியின் தாளாளர், புரட்சிக்கவிஞர்  மன்றத்தின் தலைவர்   பி .வரதராசன்  அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள்

புகைப்படங்களை எடுத்தவர்கள்: புகைப்படக் கலைஞர்" மதுரை உலா "ரெ.கார்த்திகேயன் மற்றும் சுந்தர கிருஷ்ணன் எடுத்த படங்கள்கை வண்ணம்







மாமதுரை கவிஞர் பேரவை கவியரங்கம் (25.2.2024)

<<என்ன வளம் இல்லை எங்கள் தமிழ்மொழியில்>>

என்னவளம் இல்லை எங்கள் தமிழ்மொழியில்

இதில் எல்லாமே நிறைந்நிருக்கும் உயர்மொழியில்

தன்னிகரே இல்லாத தத்துவங்கள் தமிழிலுண்டு

தானதர்மம் பற்றிபாடும்முத்துக்களிள் குவியலுண்டு

பின்னிவரும் கருத்துகளின் பெருமைமிகு பெட்டகமே

பேருலகில் நடனமிடும் அருமைமிகு நர்த்தனமே

உன்னத மொழிகளிலும் உயர்ந்தமொழி தமிழ்மொழியே

உலகெங்கும் பரந்திருக்கும் உயர்வான செம்மொழியே.

 

இயலிசை நாடகமும் ஏராளம் நம்மொழியில்

ஈடில்லா புகழ்காக்கும் பரந்தமொழி இம்மொழியே

நயமான கருத்துக்கள் நடமிடும் திருக்குறளில்

நடப்புகளை விவரிக்கும் திடமான கருப்பொருள்கள்

அயலாரும் போற்றுகிற அன்னைமொழி நந்தமிழே

அன்றாட சேவையால் உலகாளும் செந்தமிழே

தயக்கம் இல்லாது தவழ்கின்ற உயர்மொழியே

தடாகம் எல்லாமே பரவுகின்ற நிறைமொழியே.

 

நாடிந ரம்புகளில் நடனமிடும் நல்லுயிராய்

நமக்குள் நிறம்பியே உரமளிக்கும் இன்னுயிராய்  

தேடினும் கிடைக்காத திராளான காவியங்கள்

தில்லான பாடுகின்ற தீர்க்கமொழி ஓவியங்கள்

ஆடிவரும் தேராக அண்டமெலாம் கொண்டாடும்

அள்ளினாலும் குறையாத அற்புதங்கள் நின்றாடும்

ஈடில்லா படைப்புகள் எல்லாமே இம்மொழியில்

என்னவளம் இல்லை எங்கள் தமிழ்மொழியில்.

·        முனைவர் இராவரதராசன் (25.2.2024)



என்ன வளம் இல்லை எங்கள் தமிழ்மொழியில்!

         கவிஞர் இரா. இரவி

                     ***

என்ன வளம் இல்லை எங்கள் தமிழ்மொழியில்

எல்லா வளமும் பெற்ற முதல்மொழி தமிழ்!

சொற்களின் சொர்க்கமாக உள்ளது தமிழ்மொழி

சொக்க வைக்கும் சுந்தரமொழி தமிழ்மொழி


இலக்கணம் இலக்கியம் நிறைந்திட்ட தமிழ்மொழி

இனிமை நிறைந்திட்ட செம்மொழி தமிழ்மொழி

செம்மொழியின் அனைத்துத் தகுதிகளும் உள்ள தமிழ்மொழி

செம்மொழிகளில் சிறந்த மொழியும் தமிழ்மொழி


பன்னாடுகளில் ஒலிக்கும் மொழி தமிழ்மொழி

பண்பாட்டை பயிற்றுவிக்கும் மொழி தமிழ்மொழி

உலகப்பொதுமறையை உலகிற்கு தந்திட்ட தமிழ்மொழி

ஒப்பற்ற காவியங்கள் காப்பியங்கள் உள்ள தமிழ்மொழி


தொல்காப்பியம் அகத்தியம் தொன்மையுள்ள தமிழ்மொழி

தொன்றுதொட்டு என்றும் இயங்கி வரும் தமிழ்மொழி

இணையத்தில் இந்திய மொழிகளில் முதன்மையான தமிழ்மொழி

இளையோர் பயன்பாட்டிலும் சிறந்திட்ட தமிழ்மொழி


பாரதி பாரதிதாசன் கவிஞர்களைத் தந்த தமிழ்மொழி

பாரம்பரிய பெருமைகள் மிக்க மொழி தமிழ்மொழி

உலகத்தமிழ் மாநாடுகள் பல கண்ட தமிழ்மொழி

உலகத் தமிழர்கள் போற்றிப் புகழும் தமிழ்மொழி


ஓர் எழுத்தில் பொருள் சொல்லும் தமிழ்மொழி

ஓரெழுத்து மாறினால் பொருள் மாறும் தமிழ்மொழி

கல் தோன்றி மண் தோன்றா முன்னே வந்த தமிழ்மொழி

கற்காலம் தொடங்கி இக்காலம் வரை நிலைத்திட்ட தமிழ்மொழி!

********************
















********************

என்ன வளம் இல்லை?  எங்கள் தமிழ் மொழியில்! 

                            சித்தாந்த ரத்தினம் 

              எஸ் வி ஆர் மூர்த்தி  பெங்களூர் 


என்ன வளம் இல்லை ?

எங்கள்  தமிழ் மொழியில்! 


அகரம் எனும்

 தமிழ்ச் சுவடு ! 

உலக மொழிகளுக்குப் படிச்சுவடு !

முதல் மொழி!

 மூத்த மொழி !

இயல் மொழி ! 

செயல் மொழி ! (4)


ஓசையொலி  உருவாக்கம் 

 ஓங்காரத் தமிழே ! - உலகம்

பேசும் மொழிக்கு கருவாக்கம்

 தூங்காதத் தமிழே !(6)


கோடாண்டு கொடியாண்டு  

கோலாண்டு குடியாண்ட

 நாடாண்டத் தமிழ் வேந்தர் மூவர்! 

ஏடாண்டத்  தமிழுக்கு ஏற்றம் ஆவார்! 

 நீடாளும் தமிழே ! நாடாளும் தமிழினமே !(10)) 


 குறிஞ்சிக் கோடுடைத்து 

 முல்லைக் காடுடைத்து

 மருதம் 

 மண் சமைத்த மரபினர்

 நெய்தல் 

பாய் விரித்த பரதவர் 

செய் வாய் மொழியே மூத்தக் குடி தமிழ் !(14)

 

மனந்தூய்மை மனத்தானாம் 

மாந்தர்க்குத் தன்மானத் தன்னுணர்வு !

இனந்தூய்மை  இனத்தானாம்

 இனத்திற்கு இயல்பான இனவுணர்வு !

தாய் மொழித் தன்னுணர்வேநாளும் 

 தமிழ் மூச்சு !

வாய் மொழி வழி மொழியே வாழும்

 தமிழ்ப் பேச்சு ! (18)) 


வாழும் வழி காட்டும் திரு வள்ளுவம் !- உயிர்

நீளும் மொழி கூட்டும்   திரு மந்திரம் ! 

 எழுத்தில்லா மொழிகளுக்கு எழுத்துருவாகும் காலம் ! - வேர் 

விழுதான தமிழ் உலகுக்கு வழி 

 கோலும் (22)


இன்றும் வாழும் எங்கள் தமிழ் - 

என்றும் வாழ்க என வாழ்த்துவோம் ! (24)

✍️

சித்தாந்த ரத்தினம் 

 எஸ் வி ஆர் மூர்த்தி  பெங்களூர் 

நாள் : 21.02.2024

*****************************

என்ன வளம் இல்லை 
எங்கள் தமிழ் மொழியில் 
புதுக்கவிதை 
கு.கி.கங்காதரன் 


இயற்கையின் வளங்களை அளவிட முடியாது
இறைவனின் படைப்புகளைக் கணக்கிட முடியாது 
செவ்வானத்தை மலைகளால்  மறைக்க முடியாது
செம்மொழியானத் தமிழை அழிக்க முடியாது 

தமிழிலினிலே  பலப்பல வகைத் தமிழ் 
தித்திக்கும் ராகமுள்ளத் தாலாட்டுத் தமிழ் 
நளினமான அசைவுள்ள நாட்டியத் தமிழ் 
நயமானக் கருத்துள்ளக் கவிதைத் தமிழ் 

எழுத்தும் பேச்சும் கொண்ட இயற்றமிழ் 
இனிய ஓசைகளை ஒலிக்கும் இசைத்தமிழ் 
ஆடல்பாடலுடன் கூத்து காட்டும் நாடகத்தமிழ் 
அகலாய்வை உலகுக்கு உரைக்கும் தொன்மைத்தமிழ் 

வாழ்வுக்கு பயன்படும் அறிவியல் தமிழ் 
வளமானக் கற்பனைக்குக் கலைத் தமிழ்
மொழியை முறையாய் அமைக்கும்  இலக்கணத்தமிழ் 
மண்ணின் பெருமை உணர்த்தும் காவியத்தமிழ் 

இணையத்தில் உலா வரும் கணினித்தமிழ் 
இறையினைத் தொழப் பாடும் தெய்வீகத்தமிழ் 
உடல் ஆரோக்கியம் காக்கும் மருத்துவத்தமிழ் 
உலகுக்கே நல்வழி காட்டும் நீதித்தமிழ் 

எண்ணிலடங்கா சிறப்புள்ள நம் தமிழ்மொழி 
என்றென்றும் எல்லோருக்கும் பொதுமொழி 
எடுத்துரைத்த தமிழின் செழுமைகள்  கையளவு
இன்னும் தமிழில் இருப்பது கடலளவு

****************