Saturday, May 17, 2025

27.4.2025 - மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் - 33 - எம்மொழிக்கும் மூத்த மொழி தமிழே !

  


27.4.2025.கவியரங்கம் - 33


மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது.

"எம்மொழிக்கும் மூத்த மொழி தமிழே !" எனும்  தலைப்புபில்  கவியரங்கம் நடந்தது.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

தலைவர் பேராசிரியர் சி .சக்திவேல் தலைமையில் கவியரங்கம் நடந்தது. செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி வரவேற்றார். பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம்துணைத்தலைவர் முனைவர் இரா .வரதராஜன் முன்னிலை வகித்தனர் ..

தலைவர் கவிஞர் பேராசிரியர் சக்திவேல் அவர்கள் தலைமையில் ,கவிஞர்கள் இரா .இரவி , முனைவர் இரா.வரதராசன், இரா.கல்யாணசுந்தரம் , இராம பாண்டியன்,பால் பேரின்பநாதன், குறளடியான்,  ச. லிங்கம்மாள்,அனுராதா , மா .முனியாண்டி , அஞ்சூரியா க.செயராமன் ,தென்காசி புலவர் ம. ஆறுமுகம், இளையான்குடி இதயத்துல்லா,ந .சுந்தரம் பாண்டி ,பா .பழனி  ,   ஆகியோர் கவிதை பாடினார்கள்.

பேரவையின் சார்பில்  சிறப்பாக கவிதை பாடிய குறளடியானுக்கும், பால் பேரின்பநாதனும்  ,கவிதாயினி லிங்கம்மாளுக்கும், தென்காசி  புலவர் ஆறுமுகமும்  பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார்கள் .

துணைச்செயலர் கு .கி  கங்காதரன் நன்றி கூறினார் .

கவியரங்கம் நடத்த மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் இப்பள்ளியின் தாளாளர்,புரட்சிப் பாவலர் மன்றத்தின் தலைவர்   பி . வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள்.படங்கள் மதுரை  உலா ரெ.கார்த்திகேயன் ,மோகன்ராஜ் இருவரின்  கை வண்ணம்..









எம்மொழிக்கும் மூத்தமொழி தமிழே!

-    கவிஞர் இரா. இரவி

*****

சில நூறு வருடங்கள் தான் பல மொழிகளுக்கு
பல்லாயிரம் வருடங்கள் நம் தமிழ்மொழிக்கு

அகிலத்தின் ஆதிமொழி அற்புத தமிழ்மொழி
அகிலம் முழுவதும் பேசப்படும் தமிழ்மொழி

கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய
கல்கண்டு கனிமொழி நம் தமிழ்மொழி

தமிழை உச்சரித்தால் ஆயுள் நீளும் உண்மை
தமிழை ஆராய்ந்த அறிவியலார் சொன்னது இது

எண்ணிலடங்காத சொற்களின் சுரங்கம் தமிழ்மொழி
எண்ணற்ற இலக்கியங்கள் உள்ள மொழி தமிழ்மொழி

வழக்கொழிந்து விட்டன பேச்சில் இல்லை பலமொழி
வாழையடி வாழையாக தழைத்து வளர்ந்தது தமிழ்மொழி

எழுத்தே இல்லாத சிலமொழிகள் உண்டு இங்கே
எழுத்திற்கு பஞ்சமே இல்லாத பைந்தமிழ் நம் மொழி

பன்னாட்டு மொழியாக திகழ்ந்து வருவது பண்டைத்தமிழ்
பழமொழி. திருக்குறள். நாலடியார் நிறைந்தது தமிழ்

பண்பாட்டை பறைசாற்றி வரும் கம்பீரம் தமிழ்
பண்பாட்டை பலருக்கும் பயிற்றுவிக்கும் நம் தமிழ்

ஈடு இணையற்ற வளமை மிக்கது வண்டமிழ்
அமெரிக்க ஐக்கிய மன்றத்தில் இடம்பெற்ற தமிழ்

வானிற்கு அனுப்பிய மொழிகளில் இடம்பெற்ற தமிழ்
வானளாவிய புகழினை பெற்றுத் தந்திட்ட தமிழ்

எம்மொழிக்கும் மூத்தமொழி எம் தமிழே
எந்தமொழிக்கும் பகை இல்லை எம் தமிழே!





















எம்மொழிக்கும் மூத்த மொழி தமிழே 
புதுக்கவிதை 
கு.கி.கங்காதரன்  

மொழிகளின் காலக் கண்ணாடி உரைக்கும் 
மூத்தமொழி தமிழே என்பதை உணர்த்தும் 
செம்மொழிச் சிறப்பை எடுத்துக் காட்டும் 
சொக்கனின் திருவிளையாடலும் இதில் அடங்கும் 


காலஓட்டத்தில் மறைந்த மொழிகள் பற்பல 
காலூன்றி நின்றதோ அவைகளில் சிற்சில 
தாங்கிநின்ற மொழிகளில் தமிழும்  சேரும் 
தாயாய் பன்மொழிகளை ஈன்றதைக் காட்டும் 

மொழி இலக்கணத்தில் முன்னோடித் தமிழ் 
முத்தான இலக்கியங்களுக்கு முதலும் தமிழ் 
வாழ்கையோடு இணைந்து வளர்வது தமிழ் 
வாழும் தமிழர்களுக்கு அடித்தளமும் தமிழ் 

அகழாய்வில் ஆணித்தரமாய் ஓங்கி ஒலித்ததும் 
அந்நிய நாடுகளில் வேரூன்றி நிற்பதும் 
ஆதியில் இயற்கையாய்ப் பிறந்தது தமிழ்மொழியே  
ஐயமின்றி மொழிகளில் முதன்மை தமிழ்மொழியே 

********* 


******************************************************