Sunday, November 2, 2025

26.10.2025 " இருமொழி இருக்க ! மும்மொழி எதற்கு ? கவியரங்கம் -39 - அஞ்சூரியா க . செயராமன் - " தாத்தாவின் கவிதைகள்" நூல் வெளியீடு







26.10.2025  " இருமொழி இருக்க ! மும்மொழி  எதற்கு ?  " சிந்தனைக்  கவியரங்கம் 

 மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் & தொடக்கப் பள்ளியில் நடந்தது.

" இருமொழி இருக்க! மும்மொழி  எதற்கு ?  " என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.

 மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம், தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.பேரவையின் தலைவர் பேராசிரியர் சி .சக்திவேல் தலைமையில் கவியரங்கம்   நடந்தது. செயலர் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி அனைவரையும்  வரவேற்றார். பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம் முன்னிலை வகித்தார் .

 கவிஞர் அஞ்சூரியா . செயராமன் அவர்கள் எழுதிய" தாத்தாவின் கவிதைகள்" நூலை பேராசிரியர் சக்திவேல் வெளியிட புரட்சிப்  பாவலர் மன்றத்தின் தலைவர் பி..வரதராசன் அவர்கள் பெற்றுக் கொண்டு மதிப்புரை வழங்கினார் .நூலாசிரியருக்கு ஆதிசிவத்  தென்னவன் பொன்னாடைப் போர்த்தி வீரபாண்டியத் தென்னவன் விருது வழங்கி வாழ்த்தினார் .நூலாசிரியரின் பேத்தி, பேரன்கள்  உள்பட குடும்பத்தினர் வருகை தந்து சிறப்பித்தனர் .

கவிஞர்கள் இரா.இரவி ,முனைவர் வரதராஜன் , இரா.கல்யாணசுந்தரம், கு .கி  கங்காதரன்,  ,கி .கோ குறளடியான் , .அழகையா,மு . .பரமசிவம்இளையாங்குடி மு .இதயத்துல்லா, லிங்கம்மாள், மா .முனியாண்டி, அஞ்சூரியா . செயராமன் , பா.பழனி, அரங்க கிரிதரன்    ஆகியோர் கவிதை பாடினார்கள்.

 சேதுபதி மேல்நிலைப் பள்ளியின் மேனாள் தலைமையாசிரியர் கோபாலன் அவர்கள் சிறப்பாக கவிதை பாடிய குறளடியான் அவர்களுக்கும் ,யாவர் கல்லூரியின் தமிழ்த்து துறைத் தலைவர் பரந்தாமன் அவர்கள் சிறப்பாக கவிதை பாடிய இரா கலயாணசுந்தரம் அவர்களுக்கும்    பொன்னாடை போர்த்தி தென்னவன் விருதும்,.திருக்குறள் முனிசாமி எழுதிய நூலும் ,முனைவர் வரதராஜன் எழுதிய நூலும் வழங்கினார்கள் .

 வருகைதந்த அனைவருக்கும் இனிப்பு ,காரம்" தாத்தாவின் கவிதைகள்நூல் அன்பளிப்பாக  வழங்கினார் நூலாசிரியர் அஞ்சூரியா . செயராமன் அவர்கள் .

துணைத் தலைவர் முனைவர் வரதராஜன்  நன்றி கூறினார்.

 கவியரங்கம் நடத்த மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் இப்பள்ளியின் தாளாளர், புரட்சிப்  பாவலர் மன்றத்தின் தலைவர்   பி . வரதராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள்.

 படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன், இரமேஷ்   கை வண்ணம் ..

********

 















மதுரை மணி 26.10.25









இருமொழி இருக்க மும்மொழி எதற்கு?

 

-    கவிஞர் இரா. இரவி

 

*****

 

தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழி போதும்

தவிக்கவிடும் இந்தி மொழி எமக்கு வேண்டாம்!

 

இருமொழியிலேயே இமாலய சாதனை புரிகின்றனர்

மும்மொழிகளைப் புகுத்தி சாதனையைத் தடுக்காதீர்!

 

புரியாத மொழியை திணிப்பது வம்புதானே

தெரியாத மொழியை கற்பிப்பது வீண்தானே!

 

இருமொழிகளுக்கு சிரமப்படும் குழந்தைகள் உண்டு

மும்மொழி கொடுப்பது துன்பம் தரும் செயலே!

 

கட்டாயமாக வகுப்பில் கற்பிக்க முடியாது

கற்க விருப்பம் இருந்தால் தனியே கற்கலாமே!

 

கல்வி நிதியை கொடுக்காமல் இருப்பது முறையோ

கூட்டாட்சி முறைக்கு குந்தகம் தரும் செயலே!

 

ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு உதவிட வேண்டும்

ஒன்றிய அரசுக்கு வரியாக கோடிகள் கொடுக்கிறோம்!

 

நேரு மாமா தந்திட்ட உறுதிமொழி என்னாச்சு

நேர்மையாக நடந்து கொள்வதே நல்ல செயலாகும்!

 

இந்தியை எதிர்த்து போராடிய போராட்டங்கள்

இந்தியாவையே உலுக்கிப் பார்த்த போராட்டங்கள்!

 

ஒவ்வாத உணவை நம் உடலே ஏற்காது

ஒவ்வாத மொழியை தமிழர் ஏற்க இயலாது!

 

உலகின் முதல்மொழியாம் தமிழரைப் படிக்கிறோம்

உலகமொழியாம் ஆங்கிலத்தைப் படிக்கிறோம்!

 

இடையிலே இந்தியைப் படிக்கச் சொல்லாதீர்

இன்னுமொரு இந்திப் போராட்டத்திற்கு தள்ளாதீர்!

 

**********

















                                                                      


*இரு மொழி இருக்க

 *மும்மொழி எதற்கு* ?

 

ஒன்றெனச்

 சொல்ல

உண்டாவது *ஒற்றுமை* !

 

இரண்டெனச் சொல்ல 

இரண்டாவது **வேற்றுமை!* 

* (2)

 

வேற்றுமையில் ஒற்றுமை 

காண்பது *இந்தியா* !

வீணில் மூன்றாய் 

நுழைவது 

 *இந்தி* யா?(4)

 

ஒரு வழிப் 

 *பாதைப்

பயணத்தில்

ஒரு குழப்பம் இல்லை!

இரு வழிப்

 *பாதைப்

பயணத்தில்

வழிகாட்டி வர வேண்டும்!(6)

 

 

முந்தி வரும் மும்மொழியால் 

பிந்திடும்  நாட்டு மொழிகள்!

ஒன்றிருக்க 

ஒன்று வந்தால் 

என்றுமே குழப்பம் !(8)

 

  *தமிழின் பெருமை

 

பொதிகை மலையில் பிறந்தவளாம்!

பூவை பருவம் 

அடைந்தவளாம்!

கருணை நதியில் குளித்தவளாம்!

காவிரி கரையில்

களித்தவளாம்!-உலக 

வரைபடம்   வரைந்த 

நாடெல்லாம் பரவிய தமிழ்

 *உரை தமிழ் !* 

 *உலகத் தமிழ்* !(14)

 

 **தமிழர்

 *பெருமை*

 

ஒரு தாய் மக்கள் 

 *நாமென்போம்* !

ஒன்றே எங்கள் *குலமென்போம்* ! 

உரிமையில் நான்கு 

 *திசை கொண்டோம்!* 

உறவினில் நண்பர்கள்

 *பலர் கொண்டோம்* !

மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்!- பேசும் 

 *முத்தமிழ்

என்னும் *உயிர்

 *கொண்டோம்* !(20)

 

 **நன்றே!* 

 *நன்றே* !*  

கற்கை *நன்றே* ! -தாய் 

மொழிக் கல்வி

கற்கை *நன்றே* !

ஒன்றே ஒன்றே

 *இருமொழிகொள்கை  

ஒன்றே

 *நன்றே(24)*

சித்தாந்த ரத்தினம் 

 *எஸ் வி ஆர் மூர்த்தி

பெங்களூர் 

 *26.10.2025*

*************


இருமொழி இருக்க மும்மொழி எதற்கு?

புதுக்கவிதை 
கு.கி.கங்காதரன்  

உலகில்  பேசப்படும் எவ்வளவோ மொழிகள் 
ஒவ்வோர் இடத்திலும் வெவ்வேறு மொழிகள் 
மொழிகள் வெறும் ஓசைகள் மட்டுமல்ல 
மனித இனத்தின் அடையாளமும் கூட

வாழ ஒருமொழி உள்ளது தாய்மொழி
வளர ஒருமொழி நல்லது உலகமொழி
இரண்டு மொழிகளே நமது கண்கள்
அதுவே காட்டும் சாதனை வழிகள்

தாயாய் அறிவு ஊட்டும் தமிழ்மொழி
தந்தையாய் பொருள் ஈட்ட ஆங்கிலமொழி
இருமொழி படித்து வெற்றி கண்டவர்கள்
ஏட்டில் இருப்பதை வரலாறு உரைக்கும்.

தட்டிக் கொடுக்கத் தமிழ்மொழி இருக்கு
தரணியில் வலம்வர ஆங்கிலம்  பழகு
எதற்கு வேண்டும் மும்மொழி உனக்கு?
இருமொழி தந்திடுமே வாழ்வியல் கணக்கு.

வில்லாய் தமிழ் மொழியை ஏற்போம்
அம்பாய் ஆங்கிலத்தை அதில் தொடுப்போம்
குறிவைத்து வேண்டிய இலக்கை அடைவோம்
குறை காணாது நிறையாய் பயணிப்போம் .

*************